தமிழகத்தில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 30 ஆம் தேதியோடு பணி ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள் தற்காலிக பணி நீட்டிப்பு செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே 1,508 ஆய்வக நுட்புனர்கள், 530 மருத்துவர்கள் மற்றும் 1,000 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
மேலும், 31.3.2020 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்ற மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆனை வழங்கப்பட்டுள்ளது.
அதேப் போன்று, 30.4.2020 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கும் ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளது.
தற்பொழுது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியாளர்கள் ஆணை கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு, முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












