நாடு முழுவதும் கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஆன்லைன் வழியிலான வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி எனவும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கல்லூரிகளைத் திறக்கவும், பள்ளிகளைத் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசுத் தரப்பில் அதிரடியான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா பெருந்தோற்றினைக் கட்டுப்படுத்து விதமாக பல்வேறு கட்ட ஊரடங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது லை 5ம் தேதி வரையில் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆனால், இந்த ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் கல்லூரிகளைத் திறப்பதற்கான நடைமுறைகளையும் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத் தேர்வு ரத்து
முன்னதாக, தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்த நிலையில் பள்ளிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதிப்பெண் கணக்கீட்டு முறை விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
மதிப்பெண் கணக்கீடு விபரம்
அதனைத் தொடர்ந்து, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டது. மேலும் 12ம் வகுப்பிற்கான மதிப்பெண்கள் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் வெளியாகிவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகளுடன் ஊரடங்கு
இதனிடையே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் தளர்வுகளில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி
தெலங்கானா, பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலும் விரைவில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதில்
ஊரடங்கில் முக்கியமாக பாதிக்கப்பட்டதில் கல்லூரிகள், பள்ளிகள் தான். தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என கேள்விகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பாதிப்பு குறைந்தபின் முதலமைச்சர் ஆலோசித்து அறிவிப்பார் என்று அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் குறையும் பாதிப்பு
அதன்படி, தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் முதலமைச்சரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா பாதிப்பு குறைவதால் தமிழ்நாட்டில் ஜூலை 3ஆவது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
பள்ளிகளைத் திறக்க கோரிக்கை
இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை படிப்படியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரைமரி, நர்சரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச்செயலாளரான நந்தகுமார் தமிழக அரசிற்கு வலியுறுத்தி உள்ளார்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளி
அவர் விடுத்துள்ள கோரிக்கையில், 10 , 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் வகுப்புகளை தொடங்கலாம் எனவும், ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகளை திறக்கவும் வலியுறுத்தியுள்ளார். அரசின் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்டில் திறக்க வாய்ப்பு
ஜூலை மாத இறுதிக்குள் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லூரிகள் திறப்பது உறுதி
மேலும், ஆகஸ்ட் 1ம் தேதிக்குப் பிறகு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அதிரடியாக அறிவித்துள்ளார்.
பல்கலைக் கழகங்கள் திறப்பு
உயர் கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பில், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படும். ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கும். பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பதவி நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.