கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஒரு ஆண்டுகாலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஆன்லைன் வழியிலான வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி எனவும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வரும் ஜூன் 3வது வாரத்தில் இருந்து 11ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு தொடக்கம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அது ஒரு வருடத்தைக் கடந்து தற்போதும் அமலிலிருந்து வருகிறது. இதனிடையே, தற்போது கொரோனா இரண்டாம் அலையாக பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இரண்டாம் அலை
குறிப்பாக, தமிழகத்தில் இந்நோய் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரையில் தமிழகத்தில் பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளிகள் திறப்பு எப்போது?
இந்நோய்த் தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது பள்ளி, கல்லூரி போன்ற கல்வி சார்ந்த துறைகளே. மாணவர்கள் ஒரு ஆண்டிற்கும் மேலாக பள்ளி செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ஆன்லைன் வழியிலேயே கல்விகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேர்வின்றி தேர்ச்சி
இதனிடையே, ஜூன் ஒன்றுடன் புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் கடந்த கல்வியாண்டு தேர்வு குறித்தும், மாணவர்கள் தேர்ச்சி குறித்தும் பள்ளிக் கல்வித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது.
மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்
இந்நிலையில், 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக மாணவர்களை சேர்க்க அனுமதி
அந்த சுற்றறிக்கையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் பாடங்களைத் தொடர வேண்டும் என்றும், 11ம் வகுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவிகிதம் வரையில் கூடுதலாக மாணவர்களைச் சேர்க்கவும் அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பாடப்பிரிவுகளில் மாற்றம்
மேலும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த சுற்றறிக்கையில், தற்போது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவுகளில் ஏற்கெனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு, மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில் அவர்களது விருப்பத்திற்கேற்றபடி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்
மேலும், மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ, அச்சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களிலிருந்து 50 வினாக்கள் அந்தந்த பள்ளி ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும். அதில், பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.
ஜூன் 3-வது வாரம் முதல் வகுப்பு
11ம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 3-வது வாரத்திலிருந்து அப்போது கோவிட் பெருந்தொற்று குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் வகுப்புகளைத் துவங்க வேண்டும்.
மாணவர்கள் கவனத்திற்கு
2021-2022 ஆம் கல்வியாண்டில் 11ம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.