நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவாமல் தடுக்கும் பணி ஒரு பக்கம் நடைபெற்றாலும், அதற்கான ஊரடங்கால் மக்களின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 8.2 லட்சம் பிஎஃப் கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டுள்ளதாகத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்குக் காலத்தில் தொழிலாளர் வைப்பு நிதியை உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் மத்திய அரசு வழிவகை செய்திருந்தது. அதன்படி, மார்ச் 29ஆம் தேதி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், தொழிலாளர் வைப்பு நிதி உறுப்பினர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத முன்தொகையைப் பெற்றுக் கொள்ள அனுமதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து, ஊரடங்கு காலத்தில் பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், 8.2 லட்சம் பிஎஃப் கோரிக்கைகளுக்குத் தீர்வு கண்டுள்ளதாகத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தரப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு காலத்தில் வருங்கால வைப்பு நிதி கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், 8.2 லட்சம் கொரோனா கோரிக்கைகள் உட்பட, மொத்தம் 12.91 லட்சம் உரிமைக் கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்பட்டு அவர்களது பிடித்தத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.