மதுரை: பொறியியல் கல்லூரிகளின் தர மதிப்பீடு குறித்த வரிசைப்பட்டியலை இணையத்தில் வெளியிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் 2 வாரத்திற்குள் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வைரம் சந்தோஷ் ஹைகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பொறியியல் படிக்க விரும்புகின்றனர்.

நல்ல கல்லூரியை தேர்வு செய்ய கல்லூரியின் தேர்ச்சி விகிதம் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் கல்லூரியின் தர நிலை ஆகியவற்றை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
இதன் மூலம் நல்ல கல்லூரியை மாணவர்களால் தேர்வு செய்ய முடியும். கல்லூரிகளின் பட்டியலை வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் மறுக்கிறது. கடந்தாண்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் இணையதளத்தில் வெளியிட்டனர். இந்தாண்டு வெளியிடவில்லை.
எனவே நீதிமன்றம் தலையிட்டு பொறியியல் கல்லூரிகளின் தரம் மதிப்பீடு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனு விடுமுறை கால நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. "அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மனுதாரரின் கோரிக்கை குறித்து 2 வாரத்திற்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications












