தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்து வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இருப்பிட சான்றிதழ் முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 126 மருத்துவ மாணவர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை
நடைபெற்று முடிந்த மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்து மதுரையைச் சேர்ந்த சோம்நாத், ஸ்ரீலயா, நேயா உள்ளிட்ட சிலர் கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி மதுரை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
மருத்துவக் கல்லூரிகள்
அந்த மனுவில், தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில் 85 சதவிகித இடங்கள் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், 15 சதவிகித இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆயிரத்து 744 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.
தனியார் மருத்துவக் கல்லூரிகள்
அதேப் போன்று, தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,800 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ள நிலையில், மாநில இட ஒதுக்கீட்டின் கீழ் 977 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 562 இடங்களும் நிரப்பப்படுகின்றன.
தரவரிசைப் பட்டியல்
கடந்த மாதம் 6-ந்தேதி தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 8-ம் தேதி எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 15-ம் தேதி தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.
வரைமுறையற்ற தனியார் கல்லூரி
இதில், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை. இதனால் நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் வெளி மாநிலத்தவர்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். தமிழகத்தில் மருத்துவம் படித்துவிட்டு அவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று விடுவர்.
தமிழகத்திற்குப் பலனில்லை
தனியார் சுயநிதிக் கல்லூரிகள் இவ்வாறு செயல்படுவதால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை. மேலும் இந்த ஆண்டு மாநில இட ஒதுக்கீட்டின் கீழ் வெளிமாநில மாணவர்கள் ஏராளமானோர் கலந்தாய்வில் பங்கேற்று உள்ளனர். எனவே தமிழக மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் செயலாளர் 2019-2020-ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்ற கலந்தாய்வை ரத்துசெய்து அறிவிக்க வேண்டும்.
புதிய கலந்தாய்வு பட்டியல்
தமிழக மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்கிவிட்டு, புதிதாக கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு, அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுக்களில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
உயர்நீதிமன்ற உத்தரவு
இந்த வழக்கானது ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை செயலாளரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலில் இடம்பெற்றவர்கள் தகுதியின் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.
இதை ஏற்க முடியாது
இதைத்தொடர்ந்து மனுதாரர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், "தமிழக மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இடம் பெற்று உள்ளனர். இவர்கள் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள் என்றும், சமீபத்தில் வெளிமாநிலங்களுக்குச் சென்று தங்கி இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதை ஏற்க முடியாது. அவர்களுடைய இருப்பிடச் சான்றுகளைச் சரிபார்க்கவும், வெளிமாநிலங்களில் அவர்களின் இருப்பிட சான்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் மருத்துவ கலந்தாய்விலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறினார்.
126 வெளி மாநிலத்தவர்கள்
இதனைத் தொடர்ந்து, நீதிபதி கூறுகையில், "வெளிமாநில மாணவர்கள் என்று கூறப்படும் 126 மாணவர்களை இந்த வழக்கில் எதிர் மனுதாரராகச் சேர்க்கிறேன்" என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும், அந்த மாணவர்கள் எந்த அடிப்படையில் தமிழக இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய் வில் பங்கேற்றனர் என்பது குறித்தும், அவர்களின் இருப்பிட சான்று குறித்தும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், வழக்கு விசாரணையை வருகிற 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.