சென்னை: கல்லூரிப் பேராசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் அளிப்பதற்காக விரைவில் கவுன்சிலிங் நடத்தப்படும் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் உயர் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது இத்தகவலை அமைச்சர் பழனியபப்பன் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய ஒசூர் எம்எல்ஏ ஜே.கோபிநாத், புதிதாகத் தொடங்கப்பட்ட ஒசூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கௌரவப் பேராசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். மேலும், கல்லூரி 2-ஆவது "ஷிஃப்ட்'டில் பேராசிரியர் பற்றாக்குறை உள்ளது. எனவே, விரைவில் முழுநேரப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கு அமைச்சர் பழனியப்பன் பதிலளித்து பேசியது: அரசுக் கல்லூரிப் பேராசிரியர்கள் டிரான்ஸ்பர் கவுன்சிலிங் விரைவில் நடத்தப்பட உள்ளது. எனவே, ஒசூர் அரசுக் கல்லூரிக்கு முழுநேரப் பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றார் அவர்.