சென்னை: பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தனியார் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு பிப்ரவரி 10-ஆம் தேதி கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியின் அருகில் உள்ள சின்ன சேலத்தில் இயங்கி வந்த எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் மர்மமான முறையில் இறந்தனர். அதையடுத்து அந்தக் கல்லூரி முறையான உரிமம் பெறாமலும், போதிய வசதிகள் இன்றியும் இயங்கி வந்த விஷயம் வெட்டவெளிச்சமானது.
இந்த நிலையில், அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா ஜனவரி 30-ஆம் தேதி அறிவித்தார்.
அதன்படி பிப்ரவரி 10-ம் தேதி கவுன்சிலிங் அந்த மாணவர்களுக்கு நடைபெறவுள்ளது.
எஸ்.வி.எஸ். யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரியில் 2008-09 கல்வியாண்டு முதல் 2014-15 வரை சேர்ந்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் இந்த கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.
மேலும் 2015-16-ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட இடங்களின் அடிப்படையில், இந்திய மருத்துவம், ஹோமியோபதித் துறை இயக்ககத்தின் தேர்வுக்குழுவால் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டின்படி எஸ்.வி.எஸ். கல்லூரியில் படித்து வரும் மாணவர்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இந்திய முறை மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு கவுன்சிலிங் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு தேர்வுக்குழு அலுவலகத்தை 044-2621 6244 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.