சென்னை: திருச்சி மண்டலத்தில் பிரபலமாக விளங்கும் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
மிகவும் வெளிப்படையான முறையில் மாணவர் சேர்க்கையை ஆண்டுதோறும் நடத்தி வருவதில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் முன்னோடியாகத் திகழ்கிது. அதுமட்டுமல்லாமல் நன்கொடைகள், கேபிடேஷன் கட்டணம் என எதையும் மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்காமல் திறமை ஒன்றையே அடிப்படையாக வைத்து சேர்க்கையை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கைத் தொடக்கி வைத்த தூர்தர்ஷன் சென்னை மையச் செய்திப் பிரிவு இயக்குநர் இ. மாரியப்பன் பேசியது: சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கான கவுன்சிலிங் தொடங்கியுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை மிக வெளிப்படையாகவும், எந்தவித இடையூறுகளுக்கும் இடம் கொடுக்காமல் தர வரிசை அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. மற்ற நிறுவனங்களைப் போல நன்கொடைகள் எதுவும் வசூலிக்காமல் மாணவர்களுக்குத் தரமான கல்வி கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறது இப் பல்கலைக்கழகம். இதனால், அகில இந்திய அளவில் உயர் கல்விக்காக இந்தப் பல்கலைக்கழகத்துக்கு வருகின்றனர் என்றார் மாரியப்பன்.
நிகழச்சியில் பல்கலைக்கழக முதன்மையர் (திட்டம், மேம்பாடு) எஸ். வைத்திய சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பல்கலைக்கழகத்தில் இந்த கவுன்சிலிங் தொடர்ந்து ஜூன் 27 வரை நடைபெறவுள்ளது.