சென்னை: செவிலியர் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் அரசுக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிரம்பிவிட்டன.
செவிலியர் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கிய 2 நாட்களிலேயே அரசு இடங்கள் அனைத்தும் நிரம்பியிருப்பது செவிலியர் படிப்பு மீது மாணவிகளுக்கும் இருக்கும் ஆர்வத்தை பறைசாற்றுகிறது. இந்த நிலையில் அரசுக் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினருக்கான சில இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.
பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம் (பிஸியோதெரபி), பி.பார்ம், பி.ஏ.எஸ்.எல்.பி., பி.எஸ்சி. கார்டியோ பல்மனரி பெர்ஃபியூஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்தோமெட்ரி, பி.எஸ்சி. ரேடியோதெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியாலஜி- இமேஜிங் டெக்னாலஜி, ஆக்குபேஷனல் தெரபி ஆகிய படிப்புகளுக்கான கவுன்சிலிங் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இந்த கவுன்சிலிங்கை அதிகாரிகள் நடத்தி வருகின்றன. இரண்டாம் நாளான நேற்று பொதுப் பிரிவினருக்கு கவுன்சிலிங் நடைபெற்றது.
இந்த கவுன்சிலிங்கில் அரசுக் கல்லூரிகளில் 410 இடங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 184 என மொத்தம் 594 இடங்கள் நிரம்பிவிட்டன.
இந்தப் படிப்புகளுக்கு அரசு, தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என சுமார் 8 ஆயிரம் இடங்கள் உள்ளன. இரண்டாம் நாள் கலந்தாய்வின் முடிவில் அரசுக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரம்பி வழிந்தன.
தாழ்த்தப்பட்டோர், அருந்ததியர், பழங்குடியினருக்கான 15 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. வருகிற 27-ஆம் தேதி வரை கவுன்சிலிங் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications












