சென்னை: பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு பெற்றது.
கடந்த சில தினங்களாக துணை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று அனுமதி கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். நேற்று நடைபெற்ற கவுன்சிலிங்கின் முடிவில் 1,685 இடங்கள் காலியாக இருந்தன.
இது தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களைச் சேர்க்க நடத்தப்பட்ட கவுன்சிலிங் ஆகும்.
சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் செப்டம்பர் 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இன்றைய தினத்துடன் கவுன்சிலிங் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற கவுன்சிலிங்கின்போது 454 இடங்கள் நிரம்பின. தற்போதைய நிலையில் பி.எஸ்.சி. செவிலியர் 1,395, பி.பார்ம் 89, இயன்முறை மருத்துவம் 179, பி.ஓ.டி. 22 என மொத்தம் 1,685 காலியிடங்கள் உள்ளன.
இன்று நடைபெறவுள்ள கவுன்சிலிங்கில் பங்கேற்க 1000 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.