சென்னை: பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கான கவுன்சிலிங் நிறைவடைந்துள்ளது.
இந்த படிப்புகளுக்கான கவுன்சிலிங் சென்னையில் நடைபெற்று வந்தது. கவுன்சிலிங்கின் இறுதி நாளில் இந்த படிப்புகளில் 1,232 காலி இடங்கள் ஏற்பட்டுள்ளன.
பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளில் சேர தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் சென்னையில் செப்டம்பர் 14-ஆம் தேதி தொடங்கியது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கவுன்சிலிங் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இறுதி நாள் கவுன்சிலிங் செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற்றது. இறுதி நாள் கவுன்சிலிங்குக்கு 1,005 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 510 மாணவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்.
கவுன்சிலிங்கின் முடிவில் பி.எஸ்.சி. செவிலியர் 361, பி.பார்ம் 47, இயன்முறை மருத்துவம் 49, பி.ஓ.டி. 3 என மொத்தம் 460 இடங்கள் நிரம்பின.
இதைத் தொடர்ந்து தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மொத்தம் 1,232 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தகவலை மருத்துவக் கல்வித் தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.