ஜூலை 26 முதல் அங்கு அவர்களுக்காக கவுன்சிலிங்கை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் வி.லட்சுமி பிரபா கூறியதாவது:
தமிழகத்தில் 160 பொறியியல் கல்லூரிகளிலும், 126 கலைக் கல்லூரிகளிலும் எம்.சி.ஏ. படிப்பு உள்ளது. அதேபோல், 276 பொறியியல் கல்லூரிகள், 92 கலைக் கல்லூரிகளில் எம்.பி.ஏ. படிப்பு உள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்புவர்கள் டான்செட் நுழைவுத் தேர்வு மூலமாக கலந்தாய்வு முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதன்படி, நடப்பாண்டில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர விருப்பம் தெரிவித்தவர்களுக்கு கடந்த மே மாதம் அண்ணா பல்கலைக்கழகம் டான்செட் நுழைவுத் தேர்வு நடத்தியது. இதையடுத்து மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், இவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறுகிறது.
இந்த கவுன்சிலிங்கில் எம்.சி.ஏ. படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 3,168 பேர்களும், எம்.பி.ஏ. படிப்புக்கு விண்ணப்பித்துள்ள 7,673 பேர்களும் கலந்து கொள்கின்றனர். முதலில், எம்.சி.ஏ. படிப்புக்கான மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு 26-ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், நேரடியாக 2-ம் ஆண்டு சேரும் மாணவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் தேதி விவரங்கள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கலந்தாய்வுக்கு வரும் பொதுப் பிரிவினர் ரூ. 5,300-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ. 1,150-ம் வரைவோலையாகவோ அல்லது ரொக்கமாகவோ கொண்டு வர வேண்டும். வரைவோலையை THE SECRETARY, TN MBAMCA ADMISSION 2015, GOVERNMENT COLLEGE OF TECHNOLOGY, COIMBATORE - 13,என்ற முகவரிக்கு 22-ம் தேதி அன்றோ, அதற்கு பிறகான தேதிகளிலோ எடுத்து அனுப்ப வேண்டும்.
மேலும், கலந்தாய்வில் பங்கு பெறுவோர் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். கலந்தாய்வு குறித்த விவரங்களை www.gct.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளளாம் என்றார் லட்சுமி பிரபா.