சென்னை: செவிலிய பட்டயப் படிப்புக்கான இறுதிக் கட்ட கவுன்சிலிங் நேற்று நிறைவடைந்தது. கவுன்சிலிங்கின் முடிவில் மொத்தம் 3 இடங்கள் ம்டடுமே காலியாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள 2,100 செவிலியர் பட்டயப் படிப்பு இடங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்காக கவுன்சிலிங் நடைபெற்றது. இரண்டு கட்டமாக நடைபெற்ற கவுன்சிலிங்கின் முடிவில், 2,029 இடங்களில் மாணவர்கள் சேர்ந்தனர். இறுதியில் 71 காலியிடங்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில் இறுதி கட்டமாக கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்க 247 மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. கடிதம் கிடைக்கப் பெறாதவர்களும் அட்டவணைப்படி கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதில் 68 இடங்கள் பூர்த்தியாயின. வெறும் 3 இடங்கள் மட்டுமே தற்போது காலியாகவுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வித் தேர்வுக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் கூறியது:
கவுன்சிலிங்கின் முடிவில் வேலூர் செவிலியர் பயிற்சிப் பள்ளியில் 2 இடங்களும், நாகப்பட்டினம் செவிலியர் பயிற்சிப் பள்ளியில் ஒரு இடமும் காலியாக உள்ளது.
காத்திருப்புப் பட்டியலில் உள்ள மாணவிகளை அழைத்து நேர்காணலின் 3 இடங்களும் நிரப்பப்படும் என்றார்.