சென்னை: குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் கவுன்சிலிங் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குரூப் 2 தொகுதியில் அடங்கிய பணிகளுக்கு (நேர்காணல் அல்லாத) 2012-ஆம் ஆண்டு நவம்பரில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தேர்வுகளை எழுதினர். அதில், தேர்வானவர்களுக்கு இதுவரை 5 கட்டமாக கவுன்சிலிங்குகள் நடைபெற்றன.
இந்த நிலையில் காலியாகவுள்ள 22 பணியிடங்களுக்கு ஆறாவது கட்டமாக கவுன்சிலிங் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.
கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு- கலந்தாய்வுக்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு விரைவஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், அவர்களுக்கான அழைப்புக் கடிதத்தை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வரத் தவறுபவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. எனவே இதில் அவர்கள் மறக்காமல் கலந்துகொள்ளவேண்டும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.