சென்னை: எம்பிபிஎஸ் இடங்களுக்கான கவுன்சிலிங் ஏறக்குறைய நிறைவடைந்ததைத் தொடர்ந்து தற்போது பிடிஎஸ் இடங்களை நிரப்ப சென்னையில் விறுவிறுவென கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான சேர்க்கையை தமிழக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு நடத்தி வருகிறது.
சென்னை ஓமந்தூரார் உயர் மருத்துவ சிறப்பு மருத்துவமனையிலுள்ள கவுன்சிலிங் மையத்தில் இந்தக் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை முதல் கட்ட கவுன்சிலிங் நடைபெற்றது. அப்போது சுமார் 2,900 பேருக்கு சேர்க்கைக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்கள், பிடிஎஸ் இடங்களுக்கு தற்போது 2-ம் கட்ட கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்டக் கவுன்சிலிங்கின் இரண்டாம் நாளான நேற்று மொத்தம் 2,400 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 1,767 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
இந்தக் கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்களில் அரசு எம்.பி.பி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., அரசு பி.டி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேர என மொத்தம் 175 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது என்று மருத்துவக் கல்வி சேர்க்கைக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்தார்.
காலியிடங்கள் எவ்வளவு?
மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் அளித்த பிறகு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 1 எம்.பி.பி.எஸ். காலியிடம், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 28 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 2 பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 767 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்ப தொடர்ந்து வரும் சனிக்கிழமை வரை கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
கவுன்சிலிங்கில் பங்கேற்று சேர்க்கைக் கடிதம் பெறும் மாணவர்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் உரிய கல்லூரியில் சேர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன என்று டாக்டர் உஷா சதாசிவம் தெரிவித்துள்ளார்.
எம்பிபிஎஸ் இடங்கள் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் இப்போது பிடிஎஸ் இடங்களுக்குக் கிராக்கி ஏற்பட்டது. இந்த இடங்களுக்கான கவுன்சிலிங் இப்போது விறுவிறுவென நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications












