சென்னை: ஆசிரியர் பணியிடங்கள் சேர உதவு பி.எட். படிப்பில் சேர்வதற்கான கவுன்சிலிங் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. கவுன்சிலிங்கில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சென்னை காமராஜர் சாலை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் கவுன்சிலிங்கை நடத்துகிறது. இன்று காலை 8.30 மணிக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கவுன்சிலிங்கைத் தொடக்கி வைத்து, மாணவர்களின் கல்லூரிச் சேர்க்கைக்கான கடிதங்களை வழங்கினார்.

இந்த கவுன்சிலிங்கின் மூலம் தமிழகம் முழுவதும் 21 அரசு, அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். இடங்களில் 2015-16-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
அக்டோபர் 5 வரை 6 நாள்கள் இந்த கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. கவுன்சிலிங்கில் பங்கேற்க 7,425 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
செப்டம்பர் 29-ல் கணிதப் பாடப் பிரிவினருக்கும், 30-ல் இயற்பியல், வேதியியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.
அக்டோபர் 1-ல் தாவரவியல், விலங்கியல் பிரிவினருக்கும், 3-ல் தமிழ், ஆங்கில பாடப் பிரிவினருக்கும், 5-ல் காலையில் வரலாறு, புவியியல், வணிகவியல் பிரிவினருக்கும், பிற்பகல் பொருளாதாரம், மனை அறிவியல் பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












