கொரோனா தொற்று காரணமாக பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டிற்கான பருவத் தேர்வுகளை வரும் ஜூலை 1 முதல் 31 வரையில் நடத்தலாம் எனவும், வகுப்புகளை ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கலாம் என யூஜிசி அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா நோய் தொற்றிக் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 24ம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கின் காரணமாக பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து ஆராய பல்கலைக்கழகம் மானிய குழு (UGC) இரண்டு ஆய்வுக் குழுக்களை நியமித்தது. தற்போது இந்த ஆய்வுக் குழு தனது பரிந்துரையை யுஜிசி-யிடம் சமர்ப்பித்துள்ளது.
அந்தக் குழுவின் பரிந்துரையில் இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை ஜூலை மாதத்திற்குப் பதிலாகச் செப்டம்பர் மாதத்திலிருந்து தொடங்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
அதனடிப்படையில், யுஜிசி இது தொடர்பாக முடிவு செய்துள்ளது. அதன்படி நடப்பு கல்வி ஆண்டுக்கான பருவத் தேர்வை ஜூலை 1 முதல் 31ம் தேதி வரையில் நடத்தலாம் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் நாடெங்கிலும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்கையை மேற்கொள்ளலாம் எனவும், தற்போது நடப்பு கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை ஆகஸ்ட் மாதம் தொடங்கலாம், புதிய மாணவர்களுக்கான வகுப்புகளை செப்டம்பர் மாதம் தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
மேலும், இடைநிலை மாணவர்களுக்குக் கடந்த இரண்டு பருவத் தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இன்டெர்னல் மதிப்பெண்களை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் சூழ்நிலை சரியாக இருந்தால் தேர்வுகளை ஜூலை மாதமே நடத்திக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.