கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக அனைத்துப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார்ப் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசுப்பள்ளிகள், சிபிஎஸ்இ, பல்கலைக் கழக தேர்வுகள் உள்ளிட்டவை ஒத்தி வைக்கப்பட்டு மார்ச் 31ம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் தவிர்த்து மற்ற எந்த வகுப்புகளும் எடுக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சில தனியார் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மறைமுகமாகச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறைக்குப் புகார்கள் வரப்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் சம்பந்தப்பட்ட பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்கு அனைத்து பள்ளிகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. இருப்பினும், ஒரு சில தனியார் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். அவ்வாறு சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மீது தொற்றுநோய் பரவல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.