கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக கடந்த 2020 மார்ச் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முழுவதுமாக முடக்கப்பட்டன. சமீபத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கினை அறிவித்து மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு
கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து துறைகளும் முடக்கப்பட்டன. இதில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் அடங்கும். தொடர்ந்து, மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலேயே வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆன்லைன் வகுப்புகள்
ஊரடங்கின் காரணமாக மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படாத வகையில் ஆன்லைன் வழியிலான வகுப்புகளை மத்திய அரசு வலியுறுத்தியதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையிலேயே தேர்வுகளும் நடைபெற்றன.
தேர்வின்றி தேர்ச்சியான மாணவர்கள்
கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் கடுமையாக இருந்ததினால் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுகள் நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர்.
ஊரடங்கில் தளர்வுகள்
இதனிடையே, கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கு சார்ந்தவை என அனைத்தும் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி திறக்கப்பட்டன.
பள்ளிகள் மீண்டும் திறப்பு
நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. இதர வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலேயே தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, கடந்த ஆண்டைப் போலவே நடப்பு ஆண்டிலும் 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மீண்டும் அதிகரித்த கொரோனா
இந்த நிலையில், குறிப்பிட்ட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் மக்கள் மத்தியில் நோய்த் தொற்று குறித்த அச்சம் நிலவி வருகிறது.
இரவு நேர ஊரடங்கு
இதனிடையே, கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மகாராஷ்டிராவில் சமீபத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, அம்மாநிலத்தில் இரவு 8 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 7 மணி வரை இரவு நேர ஊரடங்கு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இரவு நேர ஊரடங்கு நேரத்தில் கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட பொழுது போக்கு தலங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தவிர பிற வகுப்புகளை நடத்த அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உத்தரவிடப்பட்டுள்ளார். இந்தியாவில் 2-வது அலை கொரோனா பரவி வரும் நிலையில் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.