சென்னை: கடந்த 3 ஆண்டுகளாக சர்ச்சையில் சிக்கி பிரச்னைகளின் மத்தியில் துணை வேந்தராக நீடித்த கல்யாணியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து மதுரை காமராசர் பல்கலைக் கழகத்துக்கு கன்வீனர் கமிட்டியை தமிழக அரசு அமைத்துள்ளது.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக இதுவரை பணியாற்றிய கல்யாணியின் பதவிக் காலம் நேற்றுடன் முடிந்தது. இவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட காலத்தில் இருந்தே அவரின் நியமனம் செல்லாது என்று பல்கலைக் கழக பேராசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். வழக்கும் தொடர்ந்தனர்.

ஆனால் துணை வேந்தர் கல்யாணி அந்த பதவியில் நீடித்து வந்தார். பல்வேறு இழுபறிகளுக்கு இடையே நேற்று கல்யாணி அந்த பதவியில் இருந்து விடுபட்டார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக புதிய துணை வேந்தரை தேர்வு செய்யும் பணி தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. துணை வேந்தர் நியமிக்கும் வரை பல்கலைக் கழகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியில் உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் விஜயரங்கன், ராமகிருஷ்ணன், ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கமிட்டி இன்று முதல் செயல்படும். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.


Click it and Unblock the Notifications












