சென்னை: தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படும் 900க்கும் மேற்பட்ட குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களுக்கான நிதி உதவி வழங்கப்படவில்லை. இதையடுத்து அவை செயலற்று கிடக்கின்றன.
மாணவர்கள் இடையே நுகர்வோர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் கடந்த 2006ம் ஆண்டு தமிழக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 500 குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் உருவாக்கப்பட்டன.

இதன் மூலம் விழப்புணர்வு ஏற்படுத்தவும், போட்டிகள் நடத்தவும் ஒவ்வொரு மன்றத்துக்கும் தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. இந்த தொகை கடந்த 2009ல் ரூ.2500 ஆக குறைக்கப்பட்டது. 2011ல் அந்த தொகையும் நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்துவதும் நிறுத்தப்பட்டது.
சிவில் சப்ளைஸ் ஆணையர்தான் இதற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்து மாநில அளவில் கூட்டங்களை நடத்த வேண்டும். ஆனால் 2012ல் இந்த குழு காலாவதியாகிவிட்டது. மத்திய அரசிடம் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் நுகர்வோர் பாதுகாப்பு நிதி இருக்கிறது. அதை மாநில அரசுகள் கேட்டுப் பெறுவதே இல்லை.
பள்ளிகளில் செயல்படும் என்சிசி, என்எஸ்எஸ் போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி வருகிறது. ஆனால் நுகர்வோர் விழிப்புணர்வுக்கான நிதி மட்டும் வருவதில்லை. அதை மாநில அரசுகள் கேட்டுப் பெற்று பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், தற்போது தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நுகர்வோர் நீதி மன்றங்களில் நீதிபதிகளே இல்லாத நிலையில் பள்ளி கல்லூரிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் எப்படி செயல்படும் என்று ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications












