சென்னை: நாட்டில் 3 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறது கட்டுமானத் துறை என்று தமிழக ஆளுநர் கே. ரோசய்யா தெரிவித்தார்.
சென்னையில் விருது வழங்கும் விழா

சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்ற கட்டுமானத் தொழில் மாத இதழின் கட்டுமான நிறுவன சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் ஆளுநர் ரோசய்யா கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
மியூசிக் அகாடமி
பின்னர் விழாவில் அவர் பேசியதாவது:
நாட்டில் கட்டுமானத் துறை வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் 9 சதவீத பங்கைப் பெற்றுள்ளது கட்டுமானத் தொழில்துறை.
தமிழில் மாத இதழ்
கட்டுமானத் தொழி்ல்துறைக்கென தமிழில் மாத இதழ் வருவது பாராட்டுக்குரியது. உயர் கலாசாரம், கலை, கட்டடக் கலைக்குப் புகழ்பெற்றது நமது இந்தியா.

பழங்கால இந்தியா
பழங்கால இந்தியாவிலேயே நவீன ரக கட்டடங்கள் நமது இந்தியாவில் இருந்தன. இந்தக் கலைதான் பின்பு உலகின் மேற்குப் பகுதியிலும், கிழக்குப் பகுதியிலும் பரவியது.
பழமையான கலாசாரம்
அதுபோன்ற கட்டங்களை நாம் மொஹஞ்சதாரோவிலும், ஹரப்பாவில் கண்டறிந்தோம். மாமல்லபுரத்திலுள்ள குகைக் கோயில்கள், ஒடிஸா மாநிலம் கோனார்க்கிலுள்ள புகழ்பெற்ற கோயில்கள் நமது கலையை பறைசாற்றுகின்றன.
வேகமான வளர்ச்சி
கட்டுமானத் தொழில்துறை வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தத் துறை மூலம் 3 கோடி பேர் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர். கட்டுமானத் துறை இன்னும் அதிகமான வளர்ச்சியைப் பெறவேண்டும்.
சூரிய ஒளி மின்சாரம்
மேலும் நமது தமிழகத்தில் சூரியஒளியின் மூலம் அதிக மின்சக்தியை நாம் உற்பத்தி செய்யவேண்டும். அதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை நாம் உருவாக்கவேண்டும். உலக அளவில் நாம் சிறப்பான இடத்தைப் பெற கட்டுமானத் துறையைச் சேர்ந்த தொழிலதிபர்கள் முயற்சி செய்யவேண்டும் என்றார் அவர்.
25 பேருக்கு விருது
விழாவில் கட்டுமானத் தொழில்துறையைச் சேர்ந்த 25 தொழிலதிபர்களுக்கு விருதுகளை ஆளுநர் கே. ரோசய்யா வழங்கினார்.
தொழிலதிபர்கள் பங்கேற்பு
கட்டுமானத் தொழில் இதழாசிரியர் சிந்துபாஸ்கர் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் பாரதி சிமெண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ். ரவிசங்கர், ஜெயராஜ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி. ராஜசேகர், செயின்ட் கோபைன் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சந்தானம், திருச்சி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தேவதாஸ் மனோகரன், ராஜேந்திரா அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ரூப்மதி ஆனந்த், எல்ஐசி நிறுவன தென் மண்டல செயல் இயக்குநர் டி. சித்தார்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Click it and Unblock the Notifications












