சென்னை : நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக இதுவரை எந்தத் தெளிவும் ஏற்படாமல் இருப்பது தமிழக மாணவர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்தனர்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. ஆனால் விலக்கு அளிக்க முடியாது என நட்டா தெரிவித்து விட்டாராம். அதேசமயம் தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய பின்னரே முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர்களுடன் சந்திப்பு
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை சந்தித்த பிறகு தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவது தொடர்பாக சட்ட அமைச்சரை சந்திக்க உள்ளதாக கூறினார்.
இளநிலைப் படிப்புகளுக்குத்தான் சிக்கல்
தற்போது இளநிலைப் படிப்புகளுக்குத்தான் சிக்கல் இருப்பதாகவும், முதுகலை மருத்துவப்படிப்பில் தமிழகம் பின்பற்றி வரும் இட ஒதுக்கீட்டில் எவ்வித பிரச்சனையும் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தனியார் கல்லூரிகளுக்கு விலக்கு இல்லை
இளநிலை மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு மட்டுமே நீட் தேர்வில் விலக்குக் கோரப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளுக்கு நாங்கள் விலக்கு கேட்கவில்லை என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கிடைக்குமா.. கிடைக்காதா
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்குக் கிடைக்குமா. கிராமப்புற மாணவர்களும் டாக்டர், என்ஜீனியர் போன்ற படிப்புகளில் சேர்ந்து படிப்பார்களா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இதற்கு யார் வந்து முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார்கள் என்பது தெரியாமல் தமிழக மாணவர்கள் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.