சென்னை: அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பி.எட் மற்றும் கணினி அறிவியல் பட்டம் பெற்ற கணினி பட்டதாரிகள் 20 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள் தங்களை அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இது குறித்து அரசு கண்டு கொள்ளாமல் தற்போது புதியதாக 700 கணினி ஆசிரியர்களை நியமனம் செய்துள்ளது. இதையடுத்து பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து அந்த சங்கத்தினர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:
கடந்த 2011ல் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்த போது 6ம் வகுப்பு முதல் 10ம வரை கணினி அறிவியல் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதற்கான புத்தகங்களை பயன்படுத்தவே இல்லை. தற்போது அதை பயன்படுத்த வேண்டும்.
அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் போது எங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வட்டார வள மையங்களில் காலியாக உள்ள கணினி அலுவலர் பணியிடங்களை நிரப்பும் போதும் எங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மே மாதம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












