சென்னை, மார்ச் 3: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் புதிய கணினி ஆசிரியர்கள் நியமிக்கும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனே நிறுத்த வேண்டும் என்று பணி நீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் குதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 1999, 2000ம் ஆண்டுகளில் கணினி பிரிவுகளில் பட்டம் பெற்ற 1880 கணினி ஆசிரியர்கள் தொகுப்பு ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். பின்னர் கணினி பட்டத்துடன் பி.எட் படித்திருக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுக்கு பிறகு சிறப்பு தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 50 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால்தான் ஏற்கெனவே பணியில் உள்ள கணினி ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில் 20 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக தொகுப்பு ஊதிய ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக குறைக்கப்பட்டது. ஆனாலும் ஏற்கெனவே பணியாற்றிய 652 கணினி ஆசிரியர்களும் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அந்தபணியிடங்களில் புதிய கணினி ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்று சரிபார்ப்பு பணிகள் கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.
அதனால் பணி நீக்கம் செய்யப்பட்ட கணினி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். மேலும், நீதி மன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்.