சென்னை: பார்வையற்ற மாணவர்கள் பயனடைவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு சிறப்பு அதிகாரி கண்ணன் தெரிவித்தார்.
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கத்தின் சார்பில் பார்வையற்றோருக்கான 2 ஆண்டு சுயவேலைவாய்ப்பு பயிற்சியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், கண்ணன் பேசியதாவது:
காகிதத்தில் அலுவலக உறைகள், கோப்புகள், பதிவேடுகள் ஆகியவை தயாரிக்கும் பயிற்சி அளித்து சுயவேலைவாய்ப்பில் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, புதிதாக கழிவுக் காகிதம் மூலம் பல்வேறு பைகள் தயாரிப்புப் பயிற்சி, காட்டன் துணிகளில் இருந்து அழகுசாதன பொருள்கள், நார்ப் பொருள்களில் இருந்து கால் மிதியடிகள், தையல் ஆகியவற்றில் 30 பேருக்கு 2 ஆண்டுகள் பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளனர்.
மேலும் பார்வையற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர், குரூப்-1, 2 தேர்வு எழுதுவதற்கான பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இவர்கள் எந்தெந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும், அது தொடர்பான பாடங்களை மடிக்கணினி, செல்லிடப்பேசி ஆகியவற்றில் பதிவேற்றம் செய்து காதொலிக் கருவி மூலம் எளிதாகப் பயிற்சி அளிக்க முடியும் என்றார் அவர்.