சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே மாணவர்களுக்கு சாதி சான்று வழங்க வருவாய்த்துறை திட்டமிட்டுள்ளது.
ஆண்டு தோறும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 தேர்வு நடத்துவது வழக்கம். உடனடியாக விடைத்தாள் திருத்தப்பட்டு மே மாதம் 20ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகிறது தேர்வுத்துறை. அதேபோல இந்த ஆண்டும் தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
பொதுவாக தேர்வு முடிவுகள் வெளியான பிறகு ஒரு வாரம் கடந்த பிறகு அந்தந்த பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படும். அப்போது பிளஸ் 2 கல்வித் தகுதி மற்றும் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை பள்ளியிலேயே வேலை வாய்ப்பு அலுவலக பதிவும் செய்கின்றனர். இதனால் மாணவர்கள் தேவையில்லாமல் வேலை வாய்ப்பு அலுவலகங்ளுக்கு செல்ல வேண்டியதில்லை. அதேபோல மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வசதியாக இருப்பிடம் மற்றும் சாதிச் சான்றுகள் தேவைப்படுவதால் அவற்றையும் பள்ளிகளின் மூலம் வழங்க ஏற்பாடு செய்வார்கள்.
ஆனால் இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே மாணவர்களுக்கான சாதிச் சான்று மற்றும் வருவாய் இருப்பிட சான்றுகளை வழங்கி பணிச் சுமையை குறைக்க வருவாய்த் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த தாலுகா அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயல்படும் பொதுச் சேவை மையம் மூலம் ஆன்லைன் சான்றுகளை வழங்கவும் வருவாய்த் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த வசதிகள் மூலம் சாதி இருப்பிடம், வருவாய், முதல் பட்டதாரிக்கான சான்று ஆகியவற்றை பெற்றுக் கொள்ள முடியும். ஏற்கெனவே சான்று பெற்றவர்கள் அதன் நகல்களையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த சான்றுகளின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் வராத வகையில் மேற்கண்ட சான்றுகளில் ரகசிய குறியீடுகள் இடப்படும். இவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிபார்த்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.