சென்னை : என்.சி.இ.ஆர்.டி எனப்படும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தும் ஏற்பாடுகளை செய்து வருவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாகா தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஆசிரியர் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் என்.சி.இ.ஆர்.டி அமைப்பு செயல்பட்டு வருகிறது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், நுழைவுத் தேர்வின் மூலம் பி.எட்., படிப்பில் மாணவர்களை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட்., படிப்பை, இரண்டு ஆண்டுகளாக மத்திய அரசு மாற்றியுள்ளது. அதற்கான பாடத்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
நுழைவுத் தேர்வு
இதன் தொடர்ச்சியாக, பி.எட்., படிப்பை தரமானதாக மாற்றவும், சிறந்த ஆசிரியர்களை உருவாக்கவும், மேலும் சில மாற்றங்களை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு சார்பில், இரண்டு ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் கண்டிப்பாக அமைக்க வேண்டும்.அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகங்கள் அமைக்க வேண்டும் பி.எட்., படிப்புக்கு தேசிய அளவில் நுழைவு மற்றும் தகுதி தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.
உதவித் தொகை
நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவோருக்கு, உதவித்தொகை வழங்க வேண்டும். எம்.எட்., படிப்பு காலம் இரண்டு ஆண்டில் இருந்து ஓராண்டாக மாற்றப்படும். தொலைநிலை கல்வியில், எம்.எட்., படிக்க அனுமதிக்க வேண்டும. கல்வியியல் படிப்பில் திருத்தங்கள் கொண்டு வர, ஆசிரியர் கல்வியியல் ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
பி.எட். மற்றும் பி.பிச்.எட் படிப்புகள்
இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வியியல் படிப்பை வழங்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் பி.எட்., மற்றும் பி.பிச்.எட் (பேச்சுலர் ஆப் பிசிகல் எஜுகேஷன்) படிப்பில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வினை நடத்துகின்றன. நுழைவுத் தேர்வு நடத்தி அதன் மூலம் மட்டுமே பி.எட்., மற்றும் பி.பிச்.எட் படிப்பில் மாணவ மாணவியர்கள் சேர்க்கப்படுகின்றார்கள்.
என்.சி.இ.ஆர்.டி
தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், நேரடியாக பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. மைசூரு, அஜ்மீர், போபால், புவனேஷ்வர் உள்ளிட்ட, மண்டல மையங்களில், இந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன. மிகக் குறைந்த கட்டணத்தில், தங்குமிடம் வசதிகளுடன், பட்டப்படிப்பும், பி.எட்., படிப்பும் இணைந்து நடத்தப்படுகிறது.
உடனடி வேலை வாய்ப்பு
இந்த படிப்புக்கு, உடனடி வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. வரும் கல்வி ஆண்டில், பி.எட்., இணைந்த பி.எஸ்சி., பி.ஏ., படிப்புகள், நான்கு ஆண்டுகளும், பி.எட்., இணைந்த எம்.எஸ்சி., படிப்பு ஆறு ஆண்டுகளும் நடத்தப்படுகிறது. அதே போல், பி.எட்., எம்.எட்., தலா இரு ஆண்டுகளும், பி.எட்., எம்.எட்., இணைந்த படிப்பு, மூன்று ஆண்டுகளும் கற்றுத் தரப்படுகிறது. இந்த படிப்பில் சேர, ஜூன், 11ல் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.
அதற்கு, www.ncert-cee.kar.nic.in என்ற இணையதளத்தில், மே, 10 வரை (ஆன்லைனில்) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.