சென்னை: விரைவில் ஓமந்தூரார் பல் சிறப்பு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி எம்.பி.பி.எஸ்.படிப்புகளுக்காக நடைபெற்ற இரண்டு கட்ட கலந்தாய்வில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தக் கல்லூரிகளில் சேர்வதற்காக சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் நேற்று முதல் வகுப்புகள் தொடங்கின. ஆனால், ஓமந்தூரார் கல்லூரியில் மட்டும் வகுப்புகள் தொடங்கவில்லை.
இது குறித்து மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:
புதிய மருத்துவக் கல்லூரி என்பதால் வகுப்புகள் தொடங்குவதற்கு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பி, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் வகுப்புகள் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் தொடங்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications












