சென்னை: பன்னிராண்டாம் வகுப்பு பயிலும் மாணவி திவா சர்மா டாக்டர் அப்துல் கலாம் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கால்நடைகளுக்கு மருத்துவ உதவியை அளிப்பதற்காக மன அழுத்த கண்காணிப்பு திட்ட மாதிரியை உருவாக்கியதற்காக திவா சர்மாவுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் (என்ஐஎஃப்) இக்னைட் 2015 என்ற விருதை அறிவித்தது.
இந்த விருதுக்கான போட்டியில் பள்ளிகளைச் சேர்ந்த 28,106 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 40 மாணவர்கள் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டனர். அதில் கடைசியாக 31 மாணவர்களின் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன.
ஹார்ட்வேர் மற்றும் சாஃப்ட்வேர் என்ற வகையில் இந்தத் திட்ட மாதிரியை உருவாக்க போட்டி விதிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் திவா சர்மாவின் திட்ட மாதிரி தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றது. நவம்பர் 30-ம் தேதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையால் விருதைப் பெறவுள்ளார் திவா சர்மா.
இதுகுறித்து திவா சர்மா கூறியதாவது: கால்நடைகளின் உடல்நிலை குறித்து அறிய இந்த சாஃப்ட்வேர் பயன்படும். இதைப் பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகளின் பிரச்னையை அறிய முடியும். நாடித்துடிப்பு, இருதயத் துடிப்பு, சுவாசத்துக்கு எடுத்துக்கொள்ளும் நேரம், உடல் வெப்பநிலையை இந்த சாஃப்ட்வேர் கண்காணிக்கும் என்றார் அவர்.
இந்த சாஃப்ட்வேரைத் தயாரிக்க டெல்லி ஐஐடி-யின் உதவியை நாடியுள்ளார் திவா. இந்தத் திட்டத்துக்கு உறுதுணையாக ஐஐடி டெல்லி இன்னோவேஷன் மையத்தின் பிவிஎம் ராவ் இருந்துள்ளார்.


Click it and Unblock the Notifications












