ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க மாட்டேன் என்றும், இதுபோன்ற வகுப்புகளை தடை செய்ய வேண்டும் என்றும் திருச்சியைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாகக் கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துவித கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், பள்ளி ஆரம்ப கட்ட கல்வி பயிலும் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாகவும், இதர வகுப்பு மாணவர்களுக்கு பல தளர்வுகளுடன் தேர்ச்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிய நிலையிலும் பள்ளிகளைத் திறக்கக் கூடிய சாத்திக்கூறுகள் இல்லாத நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், தமிழகத்தில் பெரும்பாலான தனியார்ப் பள்ளிகளிலும் இந்த முறையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே, திருச்சி மாவட்டம், காவிரி கரையோரமாக உள்ள சர்க்கார் பாளையம் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின் என்பவரது மகன் துரை திரவியம் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். தற்போது 9-ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பிற்குச் செல்லும் துரை திரவியம் மற்றும் அப்பள்ளி மாணவர்களுக்கு, ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலம் வகுப்புகளைத் துவங்கவுள்ளதாக அப்பள்ளியிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், தன்னால் இதுபோன்ற ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாது என்று மாணவர் துரை திரவியம், பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.
அதோடு, ஆன்லைன் வகுப்பின் மூலம் பள்ளி குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகக் கூறி, இதுபோன்ற ஆன்லைன் வகுப்புகளை உடனே தடை செய்ய உத்தரவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு துரை திரவியம் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்கான போதிய வசதிகள் இருந்தும், சக மாணவர்களுக்கு அதுபோன்ற வசதிகள் இல்லாத நிலையில் அவர்கள் எப்படி இந்த வகுப்பில் பங்கேற்பார்கள், ஆதலால் ஆன்லைன் வகுப்பு முறையை ரத்து செய்ய வேண்டும் என மாணவர் ஒருவர் பிரதமருக்கு கடிதம் எழுதியது பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
