தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கென 12,690 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் சுகாதார அலுவலரை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலனுக்காக தமிழக அரசு நியமித்துள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் ஜூன் 15ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் சில பகுதிகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ள இச்சூழ்நிலையில் மாணவர்களுக்கு தேர்வு வைக்கக் கூடாது என எதிர் கட்சியினர் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களில் மாணவர்களின் நலன் கருதி மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர் நியமிக்கப்படுவார்கள். தேர்வு மையங்களில் மருத்துவ குழுவினர் பரிந்துரைக்கும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றார்.
மேலும், 12,690 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும், 7,400 தேர்வு மையங்களில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் 12ம் வகுப்பு தேர்வெழுதும் 36,089 மாணவர்கள் முந்தைய தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.