சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், இன்று (மே29) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் அரியானா மாநிலம், குருகிராமை சேர்ந்த பிரகார் மிட்டல், உபி மாநிலம், பிஜ்னோர் பகுதியை சேர்ந்த ரிம்ஜிம் அகர்வால், ஷாம்லி பகுதியை சேர்ந்த நந்த்னி கார்க் மற்றும் கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்த ஜி.ஸ்ரீலட்சுமி ஆகியோர் 500-க்கு 499 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டிற்கான சிபிஎஸ்இ தேர்வு எழுதியவர்களின் மொத்த தேர்ச்சி சதவீதம் 86.70. இதில் 88.67 சதவீதம் மாணவியரும், 85.23 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 16,24,682 மாணவர்களில் 14,08,594 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தில்லி மண்டலத்தை பொறுத்தவரை 78.62 சதவீத மாணவர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 27,476 மாணவர்கள் 95 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்
1,31,493 மாணவர்கள், 90 முதல் 95 சதவீதம் வரை மதிப்பெண் பெற்றுள்ளனர். வெளிநாட்டு பள்ளிகளில் தேர்வெழுதிய மாணவர்களில் 98.32 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் மண்டலம் 99.60 சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தையும். சென்னை 97.37 சதவிகிதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தையும், அஜ்மீர் 91.86 சதவிகிதம் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.
தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbseresults.nic.in, results.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம்.
10 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னைக்கு 2 வது இடம்!