சென்னை : அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் ஆண்டுதோறும் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற 24 வகையான அகில இந்திய பணிகளுக்கான சவில் சர்வீசஸ் தேர்வை நடத்துகிறது. அதற்கான முடிவு நேற்று upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
முதலில் முதல் நிலை தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தேர்வானவர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் பெற்ற ரேங்க் பட்டியலின்படி இட ஒதுக்கீட்டு அடிப்படையில் அவர்கள் எந்தப் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டு அந்த வகையில் முசோரியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவார்கள்.
15445 பேர் தேர்ச்சி
அந்த வகையில் கடந்த ஆண்டுக்கான 1099 பணியிடங்களுக்காக கடந்த ஆகஸ்டு மாதம் 7ந் தேதி முதல் நிலை தேர்வு நடந்தது. இந்த தேர்வில் ஏறத்தாழ 9 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 15445 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 3ந் தேதி முதல் 9ந் தேதி வரை மெயின் தேர்வு நடந்தது.
அகில இந்திய அளவில் வெற்றி
மெயின் தேர்வில் 2961 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு டெல்லியில் கடந்த மார்ச் மாதம் முதல் நேர்முகத் தேர்வு நடந்தது. இந்த நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்காக சைதை துரைசாமியின் மனித நேய மையம் சார்பில் 145 பேர்களுக்கு சென்னையிலும் டெல்லியிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் அகில இந்திய அளவில் 1099 பேர் வெற்றி பெற்றனர்.
தேசிய அளவில் நந்தினி முதலிடம்
தேசிய அளவில் முதல் இடத்தை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கே.ஆர். நந்தினி பெற்றுள்ளார். 21வது இடத்தை பெற்றுள்ள எம்.பிரதாப் (வயது 22) தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் பயிற்சி பெற்றவர் என்று அந்த மையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மனித நேய மையத்தில் படித்தவர்களில் 49 பேர் தேர்வு பெற்றுள்ளதாகவும் இதில் 17 பேர் பெண்கள் என்றும் மனிதநேய மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல் இடம்
தேசிய அளவில் 21வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் எம்.பிரதாப் பெற்றுள்ளார். அவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு. தந்தை பெயர் முருகவனம் தாயார் பெயர் முல்லைக் கொடி பள்ளிப் படிப்பை மதுரை டி.வி.எஸ் பள்ளியில் முடித்தேன். அண்ணா பல்கழைக்கழகத்தின் பி.டெக் கெமிக்கல் என்ஜீனியரிங் படித்தேன். பி.டெக் 4ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போதே சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவது எனது லட்சியமாக இருந்தது. முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வில் தேசிய அளவில் 21வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளேன் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications












