கர்நாடகா : ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக கடந்தாண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் (யூபிஎஸ்சி) மே 31ந் தேதி வெளியிட்டது. இதில், 1099 மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 220 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி, சிவில் சர்வீஸ் தேர்வில் நாட்டிலேயே முதலிடம் பிடித்தார். இந்திய வருவாய் துறையில் தற்போது நந்தினி பணியாற்றி வருகிறார்.
பொறியியல் பட்டதாரியான நந்தினி, கர்நாடக மாநில பொதுப்பணித் துறையில் பொறியாளராகவும் பணியாற்றி உள்ளார். இனி, ஃபரிதாபாத்தில் உள்ள சுங்கம் மற்றும் கலால்வரித் துறை நிறுவனத்தில் ஐ.ஏ.எஸ் பயிற்சி பெறப்போகிறார்.
பெண்களுக்கு சமவாய்ப்பு
சமுதாயமும் பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுக்க வேண்டும். எந்தத் துறையில் நான் பணியாற்றினாலும், அதைச் சிறப்பாகச் செய்வேன் என நந்தினி குறிப்பிட்டுள்ளார். யூபிஎஸ்இ தேர்வில் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர், விஜயலஷ்மி பிதாரி முதலிடம் பிடித்தார். அதன்பின்னர், முதல்முறையாக கர்நாடகாவைச் சேர்ந்த நந்தினி யுபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.
விடா முயற்சி விஷ்வரூப வெற்றி
விடா முயற்சி விஷ்வரூப வெற்றி
கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி, சிவில் சர்வீஸஸ் தேர்வில் 849-வது இடத்திலிருந்து விடாமுயற்சியின் காரணமாக முதல் இடத்துக்கு முன்னேறி, அபார சாதனை படைத்துள்ளார். கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த இவரின் தந்தை, பள்ளி ஆசிரியர். இதற்கு முன் மூன்று முறை சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதிய நந்தினி, முதல்முறை 849-வது இடத்தைப் பெற்றார். மனம் சோர்வடையாமல் போராடிய அவரின் கடின உழைப்பால் இப்போது முதல் இடத்தை எட்டியுள்ளார். இன்ஜினீயரிங் படித்துள்ள இவர், கர்நாடக பவனில் சிவில் என்ஜீனியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது இந்திய வருவாய்த் துறை அதிகாரியாகப் பணிபுரிந்துவருகிறார்.
வெற்றி நிச்சயம்
என்னைப் பொறுத்தவரை ஐ.ஏ.எஸ் ஆவது மட்டும்தான் குறிக்கோள். குதிரைக்கு சேனை கட்டிவிட்டதுபோல் அதை மட்டுமே இலக்காகக்கொண்டு முயற்சித்தேன். நான்கு முறை சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதினேன். ஒவ்வொரு முறையும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டே இருந்தேன். நமது இலக்கு எதுவோ, அதை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. கடினமாக உழைத்தேன். வெற்றி தள்ளிப்போடப்பட்டிருக்கலாம். ஆனால், கிடைக்காமல் போகாது என்பதற்கு நானே உதாரணம்.
நந்தியின் கனவு நனவானது
கடைசி முறை 642-வது இடத்தைப் பிடித்தேன். இப்போது முதல் இடத்துக்கு வந்திருக்கிறேன். உழைப்பால் மட்டுமே இது சாத்தியமாயிற்று. இந்தியாவில் எந்த இடத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டாலும் என்னால் சிறப்பாகச் செயல்பட முடியும். என் பெற்றோர்தான் என் ரோல்மாடல். அவர்களின் ஆதரவு இல்லாமல் இத்தகைய வெற்றியை நான் பெற்றிருக்க முடியாது. ஐ.ஏ.எஸ் ஆவதுதான் என் கனவு. இப்போது அது நனவாகியுள்ளது. நான் அடைந்துள்ள மகிழ்ச்சிக்கு அளவே இல்லை'' என்று உற்சாகத்துடன் கூறுகிறார் நந்தினி.