பெங்களூரு: பிரெய்ல் காகிதத்துக்கு வரிவிலக்கு கோரி அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மூலம் சாதித்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த மாணவி.
பிரெய்ல் காகிதங்களுக்கு வரிவிலக்கை 2016-17-ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தார். இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது.
பிரெய்ல் காகிதங்களுக்கு வரிவிலக்கு கோரி கடந்த சில ஆண்டுகளாகப் போராடி வருகிறார் பெங்களூரைச் சேர்ந்த மாணவி சந்தனா சந்திரசேகர். இவர் இங்குள்ள மவுண்ட் கார்மேல் கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் பார்வைக் குறைபாடுள்ள மாணவி. 8-ம் வகுப்பு படிக்கும்போது இவருக்கு பார்வையில் குறைபாடு இருந்தது. இந்தப் பார்வைக் குறைபாடு அதிகமாகி தற்போது முழுவதும் பார்வையை இழந்துள்ளார் அவர். பிரெய்லி முறையில் படித்து வருகிறார். அவருக்கு காதும் சரிவர கேட்பதில்லை.
பிரெய்ல் காகிதங்களுக்கு வரிவிதிப்பு இருப்பதால் அது தன்னைப் போன்ற மாணவ, மாணவிகளை வெகுவாகப் பாதித்து வருகிறது என பல ஆண்டுகளாக அவர் குரல் எழுப்பி வருகிறார்.
கடந்த ஆண்டு மவுண்ட் கார்மேல் கல்லூரிக்கு அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வந்தார். அப்போது ராகுல் காந்தியுடன், சந்தனா பேசியிருக்கிறார். பார்வையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து ராகுலுடன் கலந்துரையாடினார் சந்தனா. மேலும் பிரெய்ல் காகிதங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்று சந்தனா அவரிடம் கோரினார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியுடன் தொடர்ந்து இ-மெயிலிலும் தொடர்பில் இருந்தார் சந்தனா.
பிரெய்ல் காகிதங்களுக்கு தொடர்ந்து வரிவிதிப்பு அதிகமாகி வருவது தொடர்பாக ராகுலுக்கு அவர் இ-மெயிலும் அனுப்பினார்.
சந்தனாவின் இ-மெயிலை, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அப்படியே அனுப்பி, அதற்குப் பதிலையும் சந்தனாவுக்கு ராகுல் பெற்றுத் தந்துள்ளார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் வரிவிலக்கை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்துள்ளார். சந்தனாவின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.