சென்னை : தமிழக சட்டசபையில் நேற்று பேரவை விதி எண் 110ன் கீழ், பள்ளி கல்வித்துறை தொடர்பான அறிவிப்பை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
கணிணி ஆய்வகங்கள், பள்ளி கல்வி இயக்கத்திற்கு ரூ. 33 கோடியில் புதிய
கட்டிடம், கூடுதல் வகுப்பறைகள், ரூ. 210 கோடியில் உட்கட்டமைப்பு வசதி, 660 உதவி பேராசிரியர் பணியிடங்கள், புதிய விளையாட்டு வளாகம், படகு போட்டி நடத்தும் மையம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது வேடச்சந்தூர் உறுப்பினர் பரமசிவம் கேள்வி எழுப்பினார். அப்போது அவர், உள்ளாட்சி நூலகங்களை மாவட்ட நூலக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பள்ளி கல்வித்துறையிடம் அதனை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே போல் அனைத்து நூலகங்களிலும் கம்ப்யூட்டர் வசதி, வை-பை வசதி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினார்.
மேல்நிலைப்பள்ளிகளில் வை-பை வசதி
அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்து பேசும் போது உள்ளாட்சி நூலகங்களை பள்ளிகல்வித்துறையின் கீழ் கொண்டு வர உள்ளாட்சி அமைச்சர் மற்றும் முதல் அமைச்சரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மேல்நிலைப் பள்ளிகளில் வை-பை வசதி செய்து தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றுக் கூறினார்.
437 கோடி செலவில் கணினி ஆய்வகங்கள்
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். இதன்படி 3090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும் அதனுடன் இதர சாதனங்களும் வழங்கப்படும். அதற்காக 437 கோடி 78 லட்சம் ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும் என அறிவித்தார்.
பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு புதிய கட்டிடம்
பள்ளிக்கல்வி இயக்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்தாகும். மேலும், இந்த இயக்கத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது. இதற்காக ஒரு லட்சம் சதுர அடியில் 33 கோடி ரூபாய் செலவில் பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும். இந்த கட்டிடம் மறைந்த முதல் - அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழ கட்டிடம் என்ற பெயரில் அழைக்கப்படும்.
43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய கட்டிடம்
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமாக கல்வி மற்றும் தேவையான வசதிகளை செய்து தர அரசு முன்வந்துள்ளது. அதற்காக உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் உபகரணங்கள், கலை மற்றும் கைவினை அறைகள், கணினி அறைகள், நூலகம், கழிவறைகள் போன்ற வசதிகள் 39 கோடியே 1 லட்சம் செலவில் ஏற்படுத்தி கொடுக்கப்படும். மற்றும் 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிவறைகள், ஆசிரியர் ஓய்வறைகள், மாநாட்டு அறைகள், கூட்டரங்கங்கள், கூடுதல் அறைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் 210 கோடி ரூபாய் செலவில் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும். 43 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டப்படும் கட்டிடங்கள் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழவைக் குறிக்கும் வகையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கட்டிடம் என அழைக்கப்படும்.
660 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்
தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 7 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 3 புதிய பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 2017-18ம் கல்வியாண்டில் துவங்கப்படும். இதற்கான செலவு 100 கோடியே 31 லட்சமாகும். மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 268 புதிய பாடப்பிரிவுகள், 60 இளங்கலை, 75 முதுகலை, 133 ஆராய்ச்சி பாடப்பிரிவுகள் புதிதாக அறிமுக்கப்படுத்தப்பட உள்ளன. இப்பாடபிரிவுகளை கையாள 660 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்கான செலவு 40 கோடி 38 லட்சம்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நீச்சல் குளம்
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டப்பட்டு 42 ஆண்டுகள் ஆகிவிட்டதால் அதனை இடித்துவிட்டு அதே இடத்தில் நவீன தரத்துடன் புதிய விளையாட்டு வளாகம் 15 கோடி செலவில் கட்டப்படும். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் செலவில் நீச்சல் பந்தய குளம், பயிற்சி நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், உடை மாற்றும் அறைகள், கழிவறைகள், அலுவலகம் மற்றும் பயிற்சியாளர் அறையுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த நீச்சல் குளம் அமைக்கப்படும். மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகம் அருகில், கெனாயிங் மற்றும் கயாக்கிங் விளையாட்டுகளுக்கு, முதன்மை நிலை விளையாட்டு மையம் ஒன்று 4 கோடியே 60 லட்சம் ரூபாயில் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications












