உலக நாடுகள் பார்வை, கடந்த ஒரு மாதமாகவே, தமிழ்நாட்டின் சென்னை மீது விழுந்துள்ளது.
அதற்கு என்ன காரணம் என்பதை நம்மில் பலருக்கு தெரிந்து இருக்கும்...! உலக நாடுகள் நம்மள உற்று நோக்கும் போது, நாம அது என்னனு தெரியாம இருந்தா, அது சரியா இருக்குமா? சரி வாங்க விஷயத்துக்கு போவோம்...!
2,500 வீரர்கள்
தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை (ஜூலை 28) தொடங்கி, ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் 189 நாடுகளைச் சேர்ந்த, 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். போட்டி தொடக்க விழா நாளை மாலை சென்னை நேரு உள்விளையாட்டுஅரங்கில் நடக்கிறது.
இப்போட்டி தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பே, மாநில அரசு பல்வேறு வகையில் 'ப்ரோமஷன்' பண்ண தொடங்கிட்டுங்க.
சர்வதேச அளவில் நடக்கும் இப்போட்டியை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இதற்காக நாளை பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு வருகிறார்.
விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பிரதமரை
வரவேற்கின்றனர். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு 8 மணியளவில் கிண்டியில்உள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார்.
பாதுகாப்பு வளையத்தில் தமிழகம்
பிரதமர் வருகையை முன்னிட்டு, 60-க்கும்மேற்பட்ட சிறப்பு பாதுகாப்புப் படையினர்(எஸ்.பி.ஜி.) சென்னையில் பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
சென்னை நகரம் முழுவதும் நாளை காலை முதல் நாளை மறுநாள் மாலை வரை காவல் துறையினரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்படுகிறது.
சென்னை காவல் ஆணையர் தலைமையில், 4 கூடுதல் ஆணையர்கள், 7 இணை ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் உள்பட 22 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
நிகழ்ச்சிகள் நடக்கும் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், அண்ணா பல்கலைக்கழகம், தங்குமிடமான கிண்டி ஆளுநர் மாளிகை, சென்னை விமானநிலையம், அடையாறு கடற்படை தளம் ஆகிய இடங்களிலும், செல்லும்
வழித்தடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும்
கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் உள்ள ஓட்டல்களில் சோதனை மேற்கொண்டு, சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.
அதே போல, ரயில், பேருந்து நிலையங்களிலும் பலத்த பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
7 அடுக்கு பாதுகாப்பு
சென்னை விமானநிலையத்தில் பிரதமர் ஓய்வெடுக்க உள்ளதால், 7 அடுக்குபாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமானப் படையினர் பிரதமருக்கான
ஹெலிகாப்டர்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐஎன்எஸ்அடையாறுக்கு இயக்கி, ஒத்திகை பார்த்தனர்.
ட்ரோன் பறக்க தடை
பிரதமர் வருகையையொட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க, மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
கோலாகல வரவேற்பு
சென்னை வரும் பிரதமரை வரவேற்க பா.ஜ.க., சார்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன. பரதநாட்டியம், ஒயிலாட்டம், மயிலாட்டம்
உள்ளிட்ட பாரம்பரிய முறையில் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்யவும், கட்சித் தொண்டர்களை திரட்டி வரவேற்பு அளிக்கவும், மாநில பா.ஜ.க.,திட்டமிட்டுள்ளது.
வீரர்கள் படையெடுப்பு
மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காகபல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் வந்தவண்ணம் உள்ளது. நேற்று மட்டும்(ஜூலை 26) 256 வீரர்கள் சென்னைக்கு வந்தனர்.
அதாவது, பலாவு குடியரசு, மியான்மர், சைப்ரஸ், உக்ரைன், இங்கிலாந்து, ஆஸ்திரியா, ரஷ்யா, கேமன் தீவுகள், கஜகஸ்தான், பாலஸ் தீனம், ஓமன், அங்கோலா, தான்சானியா, ஜிம்பாப்வே, புருண்டி, மால்டா, நைஜீரியா, ஜெர்மனி,
ஸ்வீடன், ஸ்லோவேனியா, பாகிஸ்தான், ஹங்கேரி, பிஜி, ரொமானியா, டென்மார்க், ஸ்காட்லாந்து, ஆஸ்திரேலியா, அரூபா, டிரினிடாட் அண்டு டொபாகோ, கயானா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வந்தனர்.
தொடர்ந்து, மங்கோலியா, பர்படாஸ் பிரான்ஸ், இத்தாலி, நியூசிலாந்து, இந்தோனேசியா, சீன தைபே, மலேசியா, லாவோஸ், பிரேசில், ஐஸ்லாந்து, பக்ஸ்சம்பர்க், போர்ட்டோரிகோ, பெர் முடா, அமெரிக்கா, எஸ்வாட்னி, கொலம்பியா, தென்கொரியா, கொரியா, கேமரூன், மங்கோலியா, பொலிவியா நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் சென்னை வந்தனர்.
போட்டி நடக்கும் ஒவ்வொரு நாளும் சர்வதேச நாடுகளின் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க தான் செய்ய போகிறது பாருங்களேன்...! அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்திய அணிகளுக்கு பதக்க வாய்ப்பு உள்ளதாக, உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார் என்பதையும், நாம் கவனிக்க வேண்டும்...! ஆல் தி பெஸ்ட் வீரர்களே...!