சென்னை நகருக்கு பெருமை சேர்த்து வருகிறது பல்வேறு கல்வி நிபுணர்களை உருவாக்கித் தந்துள்ள மாநிலக் கல்லூரி.
பிரசிடென்சி கல்லூரி என்று அழைக்கப்படும் மாநிலக் கல்லூரியானது 1940-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரி ஹயர் பர்டன் பவல் எனும் கணிதவியல் பேராசிரியரால் 1840-ம் ஆண்டு திறக்கப்பட்டது.
ஆங்கிலேயர் காலத்தில் தென் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் கல்லூரி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இன்னும் 17 ஆண்டுகளில் தனது 200-வது ஆண்டு விழாவைக் கொண்டாட இது ஆயத்தமாகி வருகிறது.
சென்னை மாநிலக் கல்லூரி தொடங்குவதற்கு முன்பாக, அதற்கான ஆயத்தப் பள்ளி, கொல்கத்தா ஹூக்ளி கல்லூரிப் பேராசிரியர் கூப்பர் என்பவரை தலைமை ஆசிரியராகக் கொண்டு எழும்பூரில் உள்ள எடின்பர்க் இல்லத்தில் 1840-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. பின்னாளில் இதுதான் மாநிலக் கல்லூரியாக மாறியது.

எடின்பர்க் இல்லம் ஆயத்தப் பள்ளிக்கு பொருத்தமான இடமாக இல்லாததால் இந்தப் பள்ளி பிராட்வே பகுதிக்கு மாற்றப்பட்டது. 1841-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எழும்பூர் பாந்தியன் சாலையில் உயர்நிலைப்பள்ளி ஒன்றும் தொடங்கப்பட்டது. அது தொடங்கப்பட்ட 10 ஆண்டுகளில் தொடக்கப் பள்ளி உருவாக்கப்பட்டது.
பின்னர் 1852-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், புனித ஜார்ஜ் கோட்டையின் ஆளுநர் சர் ஹென்றி பொட்டிங்கர் என்பவர் பல்கலைக்கழகக் குழு ஒன்றை ஏற்படுத்தினார். அந்தக் குழு 1853-ல் கல்லூரித்துறையை நிறுவியது.
1855-ம் ஆண்டு புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பொதுக்கல்வித்துறைக்குக் கல்லூரிக் கல்வி மாற்றப்பட்டு மாநிலக் கல்லூரி என்ற பெயரும் அதற்கு வழங்கப்பட்டது. மாநிலக் கல்லூரி வளர்ச்சி பெற்ற 17 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சென்னைப் பல்கலைக் கழகமே தோற்றுவிக்கப்பட்டது.
அந்த ஆண்டு முதல், சென்னைப் பல்கலைக்கழகத்தின் பாடத் திட்டத்தை ஏற்று மாநிலக் கல்லூரி செயல்படுத்தத் தொடங்கியது. இதனால் 'சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாய்' என்ற பெருமை மாநிலக் கல்லூரிக்கு உண்டு.
இத்தனை பெருமை வாய்ந்த சென்னை மாநிலக் கல்லூரி தற்போது 183 வருடங்களை கடந்து வீறுநடை போட்டு வருகிறது. அண்மையில், அரசு தன்னாட்சிக் கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசையில், சென்னை மாநிலக் கல்லூரி 3-ம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
பெங்களூருவை தலைமையகமாகக் கொண்ட 'எஜுகேஷன் வேல்டு' கல்வி இதழ், தேசிய அளவில் சிறந்த உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசையை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த அமைப்புதான் சென்னை மாநிலக் கல்லூரிக்கு 3-வது இடத்தை வழங்கி கவுரவித்தது.
உட்கட்டமைப்பு வசதி, பேராசிரியர்கள் நலன், நிர்வாகம், ஆராய்ச்சிப் பணிகள், பாடத்திட்டம், கற்றல்-கற்பித்தலில் தகவல் தொழில்நுட்ப வசதி பயன்பாடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில், தனியார் கல்லூரி, அரசு தன்னாட்சி கல்லூரி, டாப் 100 சிறந்த கல்லூரிகள் என வெவ்வேறு பிரிவுகளில் தரவரிசை வெளியிடப்படுகிறது. அரசு தன்னாட்சிக் கல்லூரிப் பிரிவில் கேரள மாநிலம் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி 531 புள்ளிகள் பெற்று முதலிடத்தையும், ஹைதராபாத் பேகம்பேட்டை அரசு மகளிர் கல்லூரி 527 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தையும், சென்னை மாநிலக் கல்லூரி 511 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
இந்தக் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டி.ஆர்.கோவிந்தாச்சாரி, மா. நன்னன், கவிஞர் மு. மேத்தா, உ.வே.சாமிநாத அய்யர் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து பணியாற்றியுள்ளனர்.
இயற்பியலில் நோபல் பரிசு வென்ற எஸ்.சந்திரசேகர், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தி.முத்துச்சாமி அய்யர், சர்.வி.ராமன், விடுதலைப் போராட்ட வீரர் ம.சிங்காரவேலர், முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், எழுத்தாளர் சாலை இளந்திரையன் உள்ளிட்டோர் இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஆவர்.
ஏராளமான பெருமைகளைப் பெற்றுள்ள இந்த சுயாட்சிக் கல்லூரியானது தற்போது இளங்கலையில் வரலாறு, அரசியல் அறிவியல், பொருளாதாரம், தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், இந்தி இலக்கியம், மலையாள இலக்கியம், உருது இலக்கியம், கார்பொரேட் செக்கரட்டரிஷிப் போன்ற பிரிவுகளையும், பி.காம் பிரிவில் பி.காம் (மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு-சிறப்பு), பி.காம் ஜெனரல் என்ற பிரிவுகளையும், இளம் அறிவியல் பிரிவில் கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், பிளான்ட் பயாலஜி அன்ட் பயோ டெக்னாலஜி, அட்வான்ஸ்டு ஜுவாலஜி அன்ட் அட்வான்ஸ்டு பயோ டெக்னாலஜி போன்ற பிரிவுகளையும், பிசிஏ (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்-காது கேளாதோருக்கானது) வழங்கி வருகிறது.
பட்ட மேற்படிப்பில் எம்.ஏ வரலாறு, அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், பொருளாதாரம், தமிழ், ஆங்கில, தெலுங்கு, சம்ஸ்கிருத இலக்கியம் ஆகிய பிரிவுகளை நடத்தி வருகிறது.
எம்.காம், எம்.எஸ்சி கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், பிளான்ட் பயோலஜி அன்ட் பயோ டெக்னாலஜி, ஜுவாலஜி, ஜியாலஜி, ஜியாகிரபி, சைக்காலஜி, அப்ளைடு மைக்ரோ பயாலஜி போன்ற பிரிவுகளை மாணவர்களுக்கு நடத்தி வருகிறது.
எம்சிஏ, எம்எஸ்டபிள்யூ, பிஎச்.டி. படிப்புகளையும் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் வழங்கி வருகிறது. ஏராளமான துறைகளை தன்னகத்தே பெற்று ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பட்டதாரிகளை உருவாக்கி வருகிறது மாநிலக் கல்லூரி.
மேலும் விவரங்களுக்கு, # 100,Kamarajar Salai, Chepauk, Chennai-600005, Tamilnadu,INDIA என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
044-28544894, 044-28586401 ஆகிய தொலைபேசி எண்களிலும் விவரங்களை கேட்டு அறியலாம்.
கூடுதல் விவரங்களுக்கு [email protected] என்ற இ-மெயில் முகவரியையும் தொடர்புகொள்ளலாம்.
200 ஆண்டுகளை இன்னும் 17 ஆண்டுகளில் தொடப் போகும் மாநிலக் கல்லூரியானது விரைவில் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெறவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications












