தமிழகத்திலுள்ள மிகவும் பழமையான கல்லூரியான பிரசிடென்சி (மாநிலக் கல்லூரி) கல்லூரியில் உள்ள படிப்புகளுக்கு தொடர்ந்து மவுசு கூடிக் கொண்டே வருகிறது. இந்தக் கல்லூரியில் சேர்வதற்காக மட்டும் 1.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மற்ற அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அடித்துத் தள்ளி பின்னுக்குத் தள்ளிவிட்டு சென்னை மாநிலக் கல்லூரி, மாணவச் செல்வங்களிடமிருந்து அதிக விண்ணப்பங்களைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. சென்னையில் 10 அரசுக் கல்லூரிகளும், கோவையில் 20 அரசுக் கல்லூரிகளும், வேலூரில் அதிகபட்சமாக 33 அரசுக் கல்லூரிகளும், மதுரையில் 29 கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

இதில் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்வதற்காக மட்டும் 2024 - 25ஆம் கல்வியாண்டில் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. ஆனால், இந்தக் கல்லூரியில் இளநிலைப் படிப்புகளில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை வெறும் 1140 மட்டுமே ஆகும்.
இதில், பிஏ பொருளாதாரவியல், பிஏ வரலாறு, பிஎஸ்சி வேதியியல் படிப்புகளில் சேர அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அதற்கடுத்த இடத்தில் தர்போது பி.காம் பட்டப்படிப்பு உள்ளது. பி.காம் படிப்புக்கு மட்டும் 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அதாவது, ஒரு மாணவர் சேர்க்கை இடத்துக்கு தோராயமாக 120 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
இந்தக் கல்லூரியில் சேர கடந்த ஆண்டு 1.20 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை 1.34 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 53,171 பேர் மாணவிகள். கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 ஆயிரம் மாணவிகள் இந்த ஆண்டு கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது சென்னை மாநிலக் கல்லூரியில், மாணவர்கள் சேர்க்கை தொடங்கிவிட்டது. சிறப்பு மாணவர்களுக்கான கலந்தாய்வு செவ்வாய் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதேபோல் சென்னை நந்தனம் கல்லூரியில் சுமார் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
தமிழக மாநிலத்தில் உள்ள பெரும்பலான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரும் 30 முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வைத் தொடங்கவிருக்கின்றன.
ஜூன் மாதம் இறுதிவரை கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும் நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜூலை 3-ம் தேதி தொடங்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












