சென்னை : சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மண்டலம் 2வது இடத்தைப் பிடித்து சாதனைப்படைத்துள்ளது. மேலும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகளும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று சாதித்துள்ளனர்.
சென்னை மண்டலம் 92.6% தேர்ச்சி வீதம் பெற்று 2வது இடத்தைப்பெற்றுள்ளது. சிபிஎஸ்இ 12ம்வகுப்பு பொதுத்தேர்வில் இராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்வரம் பள்ளி மாணவர் பி.சுந்தர் ராமன் 492 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடம் பிடித்துள்ளார். ஐஐடி நுழைவுத் தேர்வை நன்றாக எழுதி உள்ளதாகவும் ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்து படித்து கம்ப்யூட்டர் என்ஜீனியர் ஆவேன் எனக் கூறியுள்ளார்.
சென்னை நங்கநல்லூர் மாடர்ன் சீனியர் செகண்டரி பள்ளி மாணவி ஆர். ரம்யா 491 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தை பிடித்துள்ளார். ரம்யா ஏரோனாட்டிக்கல் படித்து என்ஜீனியர் ஆவேன் எனக் கூறியுள்ளார். சென்னை அண்ணா நகர் எஸ்பிஓஏ பள்ளி மாணவி பென்னிட்டா 490 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடத்தையும், அந்த பள்ளியில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார்.
சிபிஎஸ்இ தேர்வினை மாற்றுத் திறனாளிகள் 2,449 பேர் நாடு முழுவதும் தேர்வு எழுதினார்கள். அதில் 2,123 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 86.69 சதவீத தேர்ச்சியாகும்.
மாற்றுத் திறனாளி மாணவர்களைப் பொறுத்த வரை இந்திய அளவில் திருவனந்தபுரம் மாணவர் அஜய் ஆர். ராஜ் 490 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடம் பெற்று உள்ளனர். பாலக்காட்டை சேர்ந்த மாணவி லட்சுமி 486 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தை பிடித்து உள்ளார்.
கிருஷ்ணகிரியைச் சார்ந்த நாலந்தா சர்வதேச பொதுப்பள்ளி மாணவி தர்ஷணா 483 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடத்தை பிடித்து இருக்கிறார்.