தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கெரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை ஐஐடி-யில் தங்கியுள்ள மாணவர்களை வெளியேற அந்நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்தபடியே உள்ளது. குறிப்பாக, சென்னையில் நோய் பரவல் அதிவேகத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னை ஐஐடி கல்லூரி விடுதிகளில் தங்கியிருந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மாணவர்கள் அனைவரையும் விடுதியில் இருந்து இன்னும் இரண்டு நாட்களுக்குள் காலி செய்துவிடுமாறு அந்நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு உள்ள நிலையில், சென்னை ஐஐடி நிர்வாகம், ஊரடங்கு காலத்துக்கு முன் விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் சூழல் சரியாகும் வரை தொடர்ந்து தங்கியிருக்க அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில், ஐஐடி விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் அடுத்த இரண்டு தினங்களுக்குள் விடுதிகளை காலி செய்ய வேண்டும் என்றும், விடுதிகளை விட்டு மாணவர்கள் வெளியேறாவிட்டால், அவர்கள் வெளியேற்றப்படுவர் என்றும் ஐஐடி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications












