இரண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு இனி வீட்டுப்பாடம் எதுவும் கொடுக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் பாடத்திட்ட விதிமுறைகளை மீறி சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடம் நடத்தப்படுகின்றன எனவும், குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கட்டாயமாக்கப்பட்டு அவர்கள் மீது அதிகப்படியான சுமைகள் சுமத்தப்படுவதாகவும் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தற்போது சிபிஎஸ்இ பள்ளி திட்டத்தில் சில மாற்றங்களை செய்து உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இரண்டாம் வகுப்பு வரை பயிலும் பள்ளிக் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது, 8-வது வரையிலான பள்ளி மாணவ, மாணவியருக்கு புத்தகப் பையில் அதிகப்படியான சுமைகளை தரக்கூடாது உள்ளிட்ட சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளிலும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து கல்வித் துறை ஆய்வாலர்களும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரையும் சந்தித்து இதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், இந்த உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என ஆராய வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.