இந்தியாவின் மாபெரும் சாதனையாக செலுத்தப்பட்ட சந்திரயான் -2 இன் விக்ரம் லேண்டரை சரியான முறையில் தரையிறக்க முடியாமல் இறுதி நேரத்தில் இந்தியாவின் கனவு சிதைந்து போனது.
இதேபோன்று, 1979 ஆம் ஆண்டு அப்துல்கலாம் சந்தித்த முதல் தோல்வியான SLV-III குறித்தும் அந்த தோல்வியை எப்படி அவர் எதிர்கொண்டார் என்பது குறித்தும் அவரே விளக்கமும் அளித்தார்.
சந்திரயான் 2
சந்திராயன் 2, விக்ரம் லேண்டரை தரை இறக்கும் பணியை 1.38 மணிக்கு தொடங்கியது. 13 நிமிடங்களுக்குப் பிறகு இந்த தோல்வி ஏற்பட்டது. விக்ரம் லேண்டரின் வேகத்தை மணிக்கு 6048 கிலோமீட்டரில் இருந்து மணிக்கு 7 கிமீ ஆகக் குறைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது என்று தகவல் வெளியானது.
தொடர்பு துண்டிப்பு
பெங்களூருவில் செயல்பட்டு வரும் இஸ்ரோ டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்கில் உள்ள மிஷன் ஆபரேஷன்ஸ் காம்ப்ளக்ஸ் சுமார் 13 நிமிடங்களுக்குப் பிறகு லேண்டரிடமிருந்து தரவைப் பெறுவதை நிறுத்தியது. தோல்வி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் தரவில்லை என்றாலும் இஸ்ரோ தலைவர் சிவன், லேண்டருடனான தொடர்பு நாம் இழந்துவிட்டோம் என்று உருக்கமாய் தெரிவித்தார்.
இஸ்ரோ தலைவர் சிவன்
விக்ரமின் தரை இறக்கும் திட்டம் நிலவிலிருந்து 2.1 கி.மீட்டர் உயரத்தில் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென லேண்டரிலிருந்து பெங்களூரில் இருக்கும் மிஷன் ஆபரேஷன்ஸ் காம்ப்ளக்ஸ்-க்கு எவ்வித தகவலும் வரவில்லை. இறுதியாகப் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு பகுப்பாய்வு செய்ய உள்ளோம் என்றார்.
உற்சாகமாய் வந்த பிரதமர் மோடி
இந்தியா தனது விண்கலத்தைத் தென் துருவத்திற்கு அருகே தரையிறக்கி வரலாற்று சாதனை படைக்க காத்திருந்தது. இஸ்ரோ கட்டுப்பாட்டு அறை முழுவதும் மிகுந்த உற்சாகம் பொங்கியது. ஒவ்வொரு நிகழ்வுகளுக்கு நடுவே கைதட்டல், புன்னகை என விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர். சனிக்கிழமை இரவு சரியாய் 1.38 மணிக்கு விக்ரம் லேண்டர் தரை இறங்கும் பணி ஆரம்பித்தது. 15 நிமிடங்களுக்கு முன்னர் விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்நிகழ்வைக் காண வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
மோடி நம்பிக்கை
அதற்கு முன் கட்டுப்பாட்டு அறைக்கு சிக்னல்கள் வருவது நின்ற உடனேயே இஸ்ரோ தலைவர் சிவனும், இதர அதிகாரிகளும் பிரதமரிடம் உரையாடினர். சோகத்திலிருந்த அவர்களுக்கு தைரியமாக இருங்கள் என்று மோடி நம்பிக்கை அளித்தார்.
கண்கலங்கிய சிவன்
சந்திரயான் 2 தரையிறக்கத்தில் ஏற்பட்ட தோல்வியை உணர்ந்து இஸ்ரோ சிவன் கண்கலங்கி நின்ற புகைப்படங்களும், காணொளிகளும் வெளியாகி ஒட்டுமொத்த இந்தியர்களையுமே கண்கலங்க வைத்துள்ளது.
நினைவில் கொள்ளவேண்டிய ஒருவர்
இந்த நேரத்தில் நாம் அனைவருமே நினைவில் கொள்ளவேண்டியது மறைந்த சிறந்த விஞ்ஞானியும், தலைவருமான ஏ.பி.ஜே அப்துல் கலாமைத் தான். முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி, டாக்டர், ராணுவம், விண்வெளி, விமானம் என பல்வேறு ஆராய்ச்சி துறைகளில் சாதனை படைத்தவர் அவர். விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவை உச்சத்திற்குச் சென்றவர் அவர் என்றால் மிகையாகாது.
அப்துல் கலாம் சந்தித்த முதல் தோல்வி
2013 ஆம் ஆண்டு அப்துல்கலாம் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் 1979 ஆம் ஆண்டு அவர் சந்தித்த முதல் தோல்வியான SLV-III குறித்தும் அந்த தோல்வியை அவர் எவ்வாறு எதிர்கொண்டார் எனவும் அப்துல்கலாம் பகிர்ந்த நினைவுகளை இன்று நாம் ஒருமுறையேனும் திரும்பிப் பார்க்க வேண்டும்.
தோல்வி என்பது இடைப்புள்ளி
அப்துல் கலாம் தனது தோல்வி குறித்து உரையாடத் தொடங்கியதும், "வெற்றி என்பது இறுதிப்புள்ளி, தோல்வி என்பது இடைப்புள்ளி. இடைப்புள்ளிகளின் துணையின்றி இறுதிப்புள்ளியை அடைய முடியாது. வெற்றியைக் கொண்டாடத் தவறினாலும் தோல்வியை நிச்சயம் கொண்டாடத் தவறிவிடக் கூடாது. ஏனென்றால் தோல்விகள்தான் நம்மை வலுப்பெறச் செய்வதோடு பயணத்தை முழுமை பெறச் செய்யும்.
தோல்விகளின் பகிர்வு
1979 ஆம் ஆண்டு அப்போது நான் SLV-III திட்ட இயக்குநராக பணிபுரிந்து கொண்டு இருந்தேன். செயற்கைக்கோளைச் சரியான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதே நோக்கமாக இருந்தது. சுமார் 10 ஆண்டுகளாக இந்த திட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இணைந்து பணியாற்றினோம்.
தோல்விக்கு நான் தான் காரணம்..!
வெற்றியடைந்து விடுவோம் என நாங்கள் நம்பிய நாள். நான் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்தேன். செயற்கோள் தயார் நிலையில் இருந்த போது கணினி இந்த இயந்திரத்தை உடனே நிறுத்தும்படி எங்களுக்கு அறிவுறுத்தியது. நான் தான் அந்த நேரத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டும். மற்ற எல்லோரும் என் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். முழு நம்பிக்கையுடன் செயற்கைக்கோளை ஏவிவிட வேண்டும் என முடிவெடுத்தேன்.
இறுதியில் தோல்வி
நாங்கள் கணினியை நம்பாமல் எங்கள் மீது நம்பிக்கை கொண்டு செயற்கைக்கோளை ஏவிய பிறகு 4 நிலைகளைச் சந்தித்தது. முதல் கட்டம் வெற்றியில் அமைந்தது. இரண்டாம் கட்டத்தில் சோதனை எல்லை மீறியது. கடைசியில் சுற்றுப்பாதையில் வைக்கப்படுவதற்குப் பதிலாகத் தொழில்நுட்பக் காரணத்தால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.
தோல்வியை அறிவித்தேன்
இந்த தோல்வியையும், இதனால் சந்திக்க வேண்டிய அவமானங்களையும் எப்படி சமாளிப்பது என ஒருவித பதற்றத்துடனேயே செய்தியாளர்களைச் சந்தித்து தோல்வியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தேன். என் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனாலும் நான் என்னுடன் பணியாற்றிய சக விஞ்ஞானிகள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப் பட்டு இருக்கிறேன். அடுத்த வருடம் கண்டிப்பாக வெற்றி படைப்போம் என்று அறிவித்தேன்.
சொல்லியது போல் செய்தோம்
அப்போது சொல்லியது போலவே அடுத்த வருடம் வெற்றியையும் தன் வசமாக்கினார் அப்துல்கலாம். ஜூலை 18, 1980 அன்று, அப்துல் கலாம் தலைமையிலான அதே குழு ரோஹிணி ஆர்எஸ் -1 ஐ வெற்றிகரமாகச் சுற்றுப்பாதையில் செலுத்தியது. செலுத்திய தினமே செய்தியாளர்கள் சந்திப்பும் நிகழ்ந்தது. கலாம் பேசத் தொடங்கினார். தோல்வியின் போது முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட கலாம் வெற்றியின் போது அதை மற்றவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார்செ. இந்த ஒட்டுமொத்த வெற்றிக்கும் காரணம் என்னுடன் பணியாற்றியவர்கள் தான் என்றார்.