சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்கள் புதிய நபர்களை நியமிப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் சான்று சரிபார்ப்பு நடத்த உள்ளது. இதற்கான அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றிய கணினி ஆசிரியர்களில் 652 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அந்த இடங்களில் புதிய கணினி ஆசிரியர்களை நியமிக்கப் போவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்பேரில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து கணினி ஆசிரியர்களின் பதிவு மூப்பு பட்டியல்களை ஆசிரியர் தேர்வு வாரியம் ககேட்டது. கடந்த வாரம் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்தும் பட்டியல் வந்து சேர்ந்தன. அதன் அடிப்படையில் தகுதியுள்ள கணினி ஆசிரியர்கள் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரித்தது. நேற்று அந்த பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணைய தளத்தில் வெளியிட்டது.
அந்த பட்டயலில் இதர பாட ஆசிரியர்களின் பட்டியலும் இருந்தது. இது குறித்து கணினி ஆசிரியர்கள் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதனால் தகுதியுள்ள கணினி ஆசிரியர்களை மட்டும் தெரிவு செய்து பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அந்த பட்டியலில் உள்ளவர்கள் 27ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை வேலூர், சேலம் மதுரை விழுப்புரம் ஆகிய இடங்களில் நடக்கும் சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதியுள்ளவர்களுக்கான அழைப்புக் கடிதங்களையும் இணைய தளத்தில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.