சென்னை: குரூப் 2 தேர்வில் தேர்வானவர்களுக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தொடங்குகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 2 (நேர்முகத் தேர்வு இல்லாத பதவிகள்) தொகுதியில் அடங்கிய காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் டிசம்பரில் வெளியானது.
தேர்வானவர்களுக்கு இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டுப் பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை, நிலவும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.
எனவே, அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதியைக் கூற இயலாது.
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வரத் தவறினால், அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.