சென்னை: குரூப் 4 தொகுதியில் தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஜூலை 13-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 2013-14, 2014-15 ஆம் ஆண்டுக்கான குரூப் 4-இல் அடங்கிய 1,683 தட்டச்சர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்ய கடந்த ஆண்டு டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் வரும் 13-ஆம் தேதி தொடங்கி வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
சென்னை, பிரேசர் பாலம் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. சரிபார்ப்புக்கு மொத்தம் 2,176 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தலுக்கான அட்டவணை (Certificate Verification Schedule) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக் கொள்ளத் தவறும் விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
எனவே தட்டச்சர் தேர்வு எழுதி தேர்வான மாணவர்கள் உடனடியாக தங்களது பெயரைச் சரிபார்த்து ஜூலை 13-ல் நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.