மதுரை : மதுரையில் அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஒ.,க்களுக்கு புத்தாக்க மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மே 3 நேற்று துவங்கி மே 5 நாளை முடிவடைகிறது.
கல்வி அதிகாரிகள் பொதுத் தேர்வு, விடைத்தாள் திருத்தம், அரசுத் தேர்வு என ரொம்ப பிஸியாக இருந்துவந்ததால் அவர்களை டென்சன் ஃபிரியாக்குவதற்காக இந்த மூன்று நாள் முகாம் அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் மதுரையில் நடத்தப்படுவதாக இடைநிலை கல்வி திட்ட இயக்குனர் கண்ணப்பன் கூறியுள்ளார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு, விடைத்தாள் திருத்தம், ஆய்வக உதவியாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு என அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட்ட கல்வி அதிகாரிகளின் பணிச்சுமை மற்றும் மனச்சுமையை தவிர்க்கவும் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயிற்சி முகாம் இந்த கல்வியாண்டை உத்வேகத்துடன் துவங்குவதற்கு வழி வகுக்கும் மற்றும் புதிய உற்சாகத்தை கல்வி அதிகாரிகளுக்கு கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மதுரையில் நடக்கின்ற பயிற்சி முகாமை நேற்று பள்ளி கல்வி செயலாளர் உதயசந்திரன் துவக்கி வைத்தார். கல்வி மேம்பாடு, நிர்வாகம் தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் கல்வியாளர்கள் பேசுகிறார்கள். ஒடிசா கூடுதல் தலைமை செயலர் பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இறையன்பு, விஜயகுமார், தாரேஷ் அகமது, நந்தகுமார், எழுத்தாளர்கள் ராமகிருஷ்ணன், டாக்டர் கு.சிவராமன், பேராசிரியர் ஞானசம்பந்தன் மற்றும் கல்வியாளர் ஆகியோர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
மதுரையில் உள்ள நாகமலைபுதுக்கோட்டை பில்லர் ஹாலில் சி.இ.ஓ, டி.இ.ஓக்களுக்கான. திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. மே 5 நாளையுடன் இந்த பயிற்சி முகாம் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.