சென்னை: அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்(சி.இ.ஓ), மாவட்டக் கல்வி அலுவலர்கள்(டி.இ.ஓ) கூட்டம் சென்னையில் ஜூலை 29-ம் தேதி நடைபெற உள்ளது.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, தேர்ச்சி விகிதம், இடையில் நின்ற மாணவர்கள் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வரும் அதிகாரிகள், 2015-16-ஆம் கல்வியாண்டில் 6, 9, 11-ஆம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கையுடன் இந்த ஆண்டுள்ள வேறுபாடு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை எடுத்துவர வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்களையும் பள்ளிக் கல்வி இயக்ககம் கோரியுள்ளது.
சி.இ.ஓ.க்கள், டி.இ.ஓ.க்கள் தரும் விவரங்களைக் கொண்டு பல்வேறு மாற்றங்கள் இந்தக் கூட்டத்தில் கொண்டு வரப்படலாம் என்றும் தெரியவந்துள்ளது.